மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் துறையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாக, டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நியமனம் நாட்டின் மனித வள வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிருந்தாவிடம் நியமனக் கடிதத்தை வழங்கியபோது, அவரின் நீண்டகால அனுபவமும் திறமையும் டேலண்ட் கார்ப் நிறுவனத்திற்கு புதிய திசையையும் உற்சாகத்தையும் வழங்கும் என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம், கல்வி மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிருந்தா, மலேசியாவின் திறனாளர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சூழலில், புதுமை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற திறமையான மனித வளத்தை உருவாக்குவது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள டேலண்ட் கார்ப் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் தலைமைத்துவத்தை பிருந்தா வழங்குவார் என்று அமைச்சர் சொன்னார்.
பிருந்தாவின் தலைமையின் கீழ், நாட்டின் வேலைவாய்ப்பு சூழலை மேம்படுத்துவதோடு, மலேசியர்களுக்குத் தரமான மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேலும் விரிவடையும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இதற்கு முன் இந்தப் பொறுப்பை வகித்த எட்வர்ட் லிங் ஆற்றிய சேவைகளுக்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
புதிய பொறுப்பை ஏற்றுள்ள பிருந்தா மூர்த்தி, தனது அனுபவமும் திறமையும் மூலம் டேலண்ட் கார்ப் நிறுவனத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
